இப்னுல் கய்யிம் (ரஹ்) கூறுகிறார்: நபி (ஸல்) அவர்கள் மிஃராஜுக்கு தனது உடலுடன் சென்றார்கள். இப்பயணம் மஸ்ஜிதுல் ஹராமில் தொடங்கி முதலில் பைத்துல் முகத்தஸ் சென்றார்கள். ஜிப்ரீல் (அலை) நபி (ஸல்) அவர்களை ‘புராக்’ என்னும் வாகனத்தில் அழைத்துச் சென்றார்கள். ‘புராக்’ எனும் வாகனத்தை மஸ்ஜிதுல் அக்ஸாவுடைய கதவின் வளையத்தில் கட்டிவிட்டு நபிமார்கள் அனைவருக்கும் இமாமாக தொழுகை நடத்தினார்கள்.
பிறகு அதே பைத்துல் முகத்தஸிலிருந்து முதல் வானத்திற்கு
ஜிப்ரீல் அழைத்துச் சென்றார்கள். நபி (ஸல்) அவர்களுக்காக ஜிப்ரீல் கதவைத்
திறக்கக்கோரவே அவர்களுக்காக கதவு திறக்கப்பட்டது. அங்கு மனிதகுல தந்தை ஆதம் (அலை) அவர்களை சந்தித்தார்கள். ஆதம்
(அலை) நபி (ஸல்) அவர்களுக்கு முகமன், ஸலாம் கூறி
வரவேற்றார்கள். அல்லாஹ் ஆதமின் வலப்புறத்தில்
நல்லோர்களின் உயிர்களை நபி (ஸல்) அவர்களுக்குக் காண்பித்தான்.
அவ்வாறே கெட்டவர்களின் உயிர்களை அவரது இடப்புறத்தில் காண்பித்தான்.
பிறகு இரண்டாவது வானத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள். அங்கு யஹ்யா,
ஈஸா (அலை) ஆகியோரை சந்தித்தார்கள். அவ்விருவரும் நபி (ஸல்) அவர்களின் ஸலாமுக்கு பதில் கூறி அவர்களை வரவேற்றார்கள்.
அங்கிருந்து மூன்றாவது வானத்திற்கு அழைத்துச்
செல்லப்பட்டார்கள். அங்கு யூஸுஃப் (அலை) அவர்களைச் சந்தித்து
ஸலாம் கூறினார்கள். அவர்கள் ஸலாமுக்குப் பதில் கூறி, நபி (ஸல்) அவர்களை வரவேற்றார்கள். பிறகு நான்காவது வானத்திற்குச் சென்று
இத்ரீஸ் (அலை) அவர்களை சந்தித்தார்கள். நபி (ஸல்) ஸலாம்
கூற அவர்கள் பதில் கூறி நபி (ஸல்) அவர்களை
வரவேற்றார்கள். பிறகு ஐந்தாவது வானத்திற்குச் சென்று ஹாரூன் (அலை) அவர்களை சந்தித்து ஸலாம் கூற அவர்களும் பதில் கூறி, நபி (ஸல்) அவர்களை வரவேற்றார்கள். பிறகு ஆறாவது வானத்திற்குச் சென்று மூஸா
(அலை) அவர்களைச் சந்தித்து ஸலாம் கூற அவர்கள் பதில் கூறி
வரவேற்றார்கள். மூஸா (அலை) அவர்களைக் கடந்து
நபி (ஸல்) சென்றபோது மூஸா (அலை) அழ ஆரம்பித்தார்கள். ”நீங்கள் ஏன்
அழுகிறீர்கள்?” என்று கேட்டதற்கு, ”எனக்குப் பிறகு அனுப்பப்பட்டவரின்
சமுதாயத்தில் சொர்க்கம் செல்பவர்கள் எனது உம்மத்தில் சொர்க்கம்
செல்பவர்களைவிட அதிகமாக இருப்பதால் நான் அழுகிறேன்” என்று கூறினார்கள். பிறகு ஏழாவது வானத்திற்கு சென்றார்கள். அங்கு
இப்றாஹ்ீம் (அலை) அவர்களைச் சந்தித்து ஸலாம் கூற, பதில் கூறி நபி
(ஸல்) அவர்களை வரவேற்றார்கள். ஏழு வானங்களில் சந்தித்த
அனைத்து இறைத்தூதர்களும் முஹ்ம்மது (ஸல்) அவர்களின் நபித்துவத்தை ஏற்றுக்
கொண்டார்கள்.
பிறகு ‘ஸித்ரதுல் முன்தஹ்ா’விற்கு அழைத்துச்
செல்லப்பட்டார்கள். அதன் பழங்கள் ஹ்ஜர் நாட்டு பானைகளைப் போன்றும்,
அதன் இலைகள் யானைகளின் காதுகளைப் போன்றும் இருந்தன. பிறகு ஸித்ரதுல் முன்தஹாவை தங்கத்தினாலான வண்ணத்துப் பூச்சிகளும்,
பிரகாசமும், பல நிறங்களும்
சூழ்ந்துகொண்டவுடன் அது மாற்றமடைந்தது. அல்லாஹ்வின் படைப்பினங்களில்
எவரும் அதன் அழகை வருணிக்க முடியாத அளவுக்கு அது இருந்தது. பிறகு அங்கிருந்து
பைத்துல் மஃமூருக்கும்* அழைத்துச் செல்லப்பட்டார்கள். அதில் ஒவ்வொரு
நாளும் 70,000 மலக்குகள் நுழைகிறார்கள். ஒருமுறை நுழைந்தவர்கள்
மீண்டும் அங்கு வருவதில்லை.
பிறகு சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள்.
அங்கு முத்து வளையங்கள் இருந்தன. சுவர்க்கத்தின் மண் கஸ்தூரியாக இருந்தது.
பிறகு அங்கிருந்து அதற்கு மேல் அழைத்துச் செல்லப்பட்டார்கள்.
அங்கு எழுதுகோள்களின் சப்தங்களைக் கேட்டார்கள்.
பிறகு அல்லாஹ்விடம் அழைத்து செல்லப்பட்டார்கள்.
(சேர்ந்த) இரு வில்களைப் போல் அல்லது அதைவிடச் சமீபமாக அல்லாஹ்வை அவர்கள்
நெருங்கினார்கள். அல்லாஹ் தனது நபி (ஸல்) அவர்களுக்குப் பல விஷயங்களை
அறிவித்துக் கொடுத்தான். ஐம்பது நேரத் தொழுகைகளை அவர்கள் மீது
கடமையாக்கினான்.
அவர்கள் திரும்பி வரும்போது மூஸா (அலை) அவர்களை
சந்தித்தார்கள். மூஸா (அலை)
”தங்கள் இறைவன் தங்களுக்கு என்ன கடமையாக்கினான்”
என்று கேட்க நபி (ஸல்) ”ஐம்பது நேரத் தொழுகைகளைக் கடமையாக்கினான்”
என்று கூறினார்கள். மூஸா (அலை) ”நீங்கள் திரும்பிச் சென்று உங்களது இறைவனிடம் இதைக் குறைக்கச் சொல்லுங்கள்” என்று கூறவே நபி
(ஸல்) ஆலோசனைக் கேட்பதைப் போன்று ஜிப்ரீலைப் பார்த்தார்கள்.
ஜிப்ரீல் ”நீங்கள் விரும்பினால்
அப்படியே செய்யுங்கள்” என்று கூறவே நபி (ஸல்) அதை ஏற்றுக்கொண்டு
அல்லாஹ்விடம் திரும்பச் சென்றார்கள். அல்லாஹ் பத்து நேரத் தொழுகைகளைக்
குறைத்தான்.
திரும்பும்போது மூஸா (அலை) அவர்களைச்
சந்திக்கவே அவர்கள் மீண்டும் குறைத்து வர ஆலோசனை கூற, நபி (ஸல்),
அல்லாஹ்விற்கும் மூஸாவுக்கும் இடையில் திரும்பத் திரும்ப சென்று வந்ததில் அல்லாஹ் ஐம்பதை ஐந்து நேரத் தொழுகைகளாக ஆக்கினான். மூஸா
(ஸல்) மீண்டும் சென்று குறைத்து வரும்படி கூறவே, நபி (ஸல்)
அவர்களுமோ ”நான் எனது இறைவனிடம்
திரும்பச் சென்று இதற்கு மேல் குறைத்துக் கேட்பதற்கு வெட்கப்படுகிறேன்.
என்றாலும் நான் இதைக் கொண்டு மகிழ்ச்சி அடைகிறேன். முழுமையாக ஏற்றுக்
கொள்கிறேன்” என்று கூறிவிட்டார்கள். அதற்குப் பின் நபி (ஸல்) சற்று தூரம்
சென்று விடவே, அல்லாஹ் அவர்களை அழைத்து ”நீங்கள் எனது கடமையையும் ஏற்றுக்கொண்டீர்கள். எனது அடியார்களுக்கு
இலகுவாகும் ஆக்கிவிட்டீர்கள்” என்று கூறினான். (ஜாதுல் மஆது)
நபி (ஸல்) அவர்களின் இருதயம் இப்பயணத்திலும்
பிளக்கப்பட்டது என்று சில அறிவிப்புகளில் வந்துள்ளது. மேலும், இப்பயணத்தில் நபி
(ஸல்) பலவற்றைக் கண்டார்கள்.
நபி (ஸல்) அவர்களுக்கு பாலும், மதுவும் வழங்கப்பட்டது. நபி (ஸல்) பாலை தேர்ந்தெடுத்துக்
கொண்டார்கள். அதற்கு ”நீங்கள் இயற்கை நெறிக்கு வழிகாட்டப்பட்டீர்கள். நீங்கள்
மதுவை எடுத்திருந்தால் உங்களது சமுதாயத்தினர்
வழிகெட்டிருப்பார்கள்” என்று கூறப்பட்டது.
ஸித்ரத்துல் முன்தஹ்ாவின் வேரிஇருந்து
நான்கு ஆறுகள் வெளியாகுவதைப் பார்த்தார்கள். இரண்டு ஆறுகள் வெளிரங்கமானது. இரண்டு ஆறுகள் உள்ரங்கமானது, வெளிரங்கமான
இரண்டு ஆறுகள் நீல் (நைல்), ஃபுராத் ஆகும். இவ்விரண்டின் பிறப்பிடம் அங்கிருந்துதான்
உருவாகிறது. மற்ற உள்ரங்கமான இரண்டு ஆறுகள் சுவர்க்கத்தில்
உள்ள ஆறுகளாகும். நீல், ஃபுராத் நதிகளை நபி (ஸல்)
பார்த்தது, ‘இவ்விரு பகுதிகளிலும் இஸ்லாம் பரவும்’ என்பதற்கு ஒரு
முன்னறிவிப்பாக இருக்கலாம். (இரகசியங்களை அல்லாஹ்வே மிக அறிந்தவனாக
இருக்கின்றான்.)
நரகத்தின் காவலாளியைப் பார்த்தார்கள்.
அவர் சிரிப்பதே இல்லை. முகமலர்ச்சியும் புன்முறுவல் என்பதும் அவரிடம் காணமுடியாத ஒன்று. அவரது பெயர் மாலிக். மேலும், செர்க்கத்தையும் நரகத்தையும் பார்த்தார்கள். அனாதைகளின் சொத்துகளை
அநியாயமாகப் பயன்படுத்திக் கொண்டவர்களைப் பார்த்தார்கள். அவர்களுடைய
உதடுகள் ஒட்டகங்களின் உதடுகளைப் போன்று இருந்தது. அம்மிக்
குழவிகளைப் போன்ற நெருப்புக் கங்குகளை அவர்களது வாயில்
தூக்கி எறியப்படவே அது அவர்களின் பின் வழியாக வெளியேறிக்
கொண்டிருந்தது.
வட்டி வாங்கி வந்தவர்களையும் பார்த்தார்கள்.
அவர்களது வயிறு மிகப் பெரியதாக இருந்ததால் அவர்கள் தங்களது இடங்களிலிருந்து
எந்தப் பக்கமும் திரும்ப சக்தியற்றவர்களாக இருந்தனர். ஃபிர்அவ்னின்
குடும்பத்தாரை நரகத்தில் கொண்டு வரப்படும்போது அவர்கள் இவர்களைக் கடந்து
செல்வார்கள். அப்போது அவர்கள் இவர்களை மிதித்தவர்களாகச் செல்வார்கள்.
விபசாரம் செய்தவர்களையும் பார்த்தார்கள். அவர்களுக்கு முன் கொழுத்த நல்ல இறைச்சித் துண்டும்
இருந்தது. அதற்கருகில் துர்நாற்றம்
வீசும் அருவெறுப்பான மெலிந்த இறைச்சித் துண்டும் இருந்தது. அவர்கள் இந்த
துர்நாற்றம் வீசும் இறைச்சித் துண்டையே சாப்பிடுகின்றனர். நல்ல கொழுத்த
இறைச்சித் துண்டை விட்டுவிடுகின்றனர்.
பிற ஆண்கள் மூலம் குழந்தை பெற்றுக்கொண்டு,
அதை தங்களது கணவன் மூலம் பெற்ற குழந்தை என்று கூறும் பெண்களையும்
பார்த்தார்கள். இத்தகைய பெண்கள் மார்பகங்கள் கட்டப்பட்டு அதில் அவர்கள் தொங்கிக் கொண்டிருந்தார்கள்.
நபி (ஸல்) மிஃராஜ் போகும்போதும் வரும்போதும் மக்காவாசிகளின்
வியாபாரக் கூட்டத்தை வழியில் பார்த்தார்கள். அவர்களின் ஓர்
ஒட்டகம் தவறி இருந்தது. அவர்களுக்கு நபி (ஸல்) அதை காண்பித்துக்
கொடுத்தார்கள். அவர்கள் தூங்கிக் கொண்டிருந்தபோது அவர்களின் மூடி
வைக்கப்பட்டிருந்த பாத்திரத்தில் இருந்து தண்ணீரை அருந்திவிட்டு
மீண்டும் அப்பாத்திரத்தை அவ்வாறே மூடி வைத்து விட்டார்கள். அன்று இரவு
விண்வெளிப் பயணம் முடித்து திரும்பிய நபி (ஸல்), காலையில் மக்களுக்கு இப்பிரயானக் கூட்டத்தைப் பற்றிக் கூறியது நபி
(ஸல்) அவர்களின் விண்வெளிப் பயணம் உண்மை என்பதற்குரிய
மிகப்பெரிய ஆதாரமாக அமைந்தது.
(ஸஹீஹ்ுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம், (ஜாதுல் மஆது,
இப்னு ஹிஷாம்)
இப்னுல் கய்யிம் (ரஹ்) கூறுகிறார்: காலையில் நபி
(ஸல்) தங்களது கூட்டத்தாரிடம் அல்லாஹ் தனக்குக் காண்பித்த மாபெரும்
அத்தாட்சிகளை அறிவித்தார்கள். இதைக் கேட்ட அம்மக்கள் முன்பைவிட அதிகமாக நபி (ஸல்) அவர்களுக்கு நோவினையும், தொந்தரவும்
கொடுத்து அவர்களை ‘பெரும் பொய்யர்’ என்று வருணித்தனர். ”உங்களது பயணம்
உண்மையானதாக இருந்தால் எங்களுக்கு பைத்துல் முகத்தஸின் அடையாளங்களைக்
கூறுங்கள்” என்று கேட்டனர். அல்லாஹ்
நபி (ஸல்) அவர்களின் கண்முன் பைத்துல் முகத்தஸைக் காண்பிக்கவே நபி
(ஸல்) அவர்கள் அம்மக்கள் கேட்ட அடையாளங்களை அப்படியே கூறினார்கள்.
அதில் எதையும் அவர்களால் மறுக்க முடியவில்லை. நபி (ஸல்) அவர்கள் மிஃராஜ்
போகும் வழியில் சந்தித்த வியாபாரக் கூட்டத்தையும், அது எப்போது மக்காவிற்கு வரும் என்பதையும், அவர்களது
காணாமல்போன ஒட்டகத்தைப் பற்றியும்
மக்காவாசிகளுக்கு அறிவித்தார்கள். நபி (ஸல்) எவ்வாறு கூறினார்களோ
அனைத்தும் அவ்வாறே இருந்தன. இருப்பினும் இந்த உண்மையை ஏற்றுக் கொள்ளாத அவர்கள் நிராகரிக்கவே செய்தனர். சத்தியத்தை
விட்டும் வெகுதூரம் விலகியே சென்றனர். (ஸஹீஹுல் புகாரி,
ஸஹீஹ் முஸ்லிம், ஜாதுல் மஆது)
மக்கள் இந்நிகழ்ச்சியை பொய்யென்று மறுத்துக்
கூறியபோது அபூபக்ர் (ரழி) இந்நிகழ்ச்சியை உண்மையென்றும், சத்தியமென்றும்
ஏற்றுக் கொண்டதால்தான் அவர்களை ‘சித்தீக்’ (வாய்மையாளர்) என்று
அழைக்கப்பட்டது. (இப்னு ஹிஷாம்)
No comments:
Post a Comment